எல்லா வங்கி சேவைகளையும் போல பாடுபடப்போகும் அஞ்சலகங்கள்: மோடியரசின் டிஜிட்டல் புரட்சி எதிரொலி.!
எல்லா வங்கி சேவைகளையும் போல பாடுபடப்போகும் அஞ்சலகங்கள்: மோடியரசின் டிஜிட்டல் புரட்சி எதிரொலி.!

மத்திய அரசின் புதிய திட்டப்படி இனி முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், மின்சார கட்டணம் செலுத்துவது, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது உட்பட 73 சேவைகளை போஸ்ட் ஆபீஸ் செய்யத் தொடங்கியுள்ளது.
மேலும், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு விண்ணப்பித்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை உருவாக்குதல், மொபைல் மற்றும் DTH ரீசார்ஜ், ஃபாஸ்ட் டேக், மின்சாரம், நீர், தொலைபேசி, எரிவாயு ஆகியவற்றிற்கு பணம் செலுத்தும் வசதிகளும் இனி இங்கு அளிக்கப்படவுள்ளன. 300 தபால் ஆபீஸ்களில் இவை சோதனை முறையில் நடைபெறுகின்றன.
இப்போது தபால் துறை மற்றும் இந்திய தபால் துறை வங்கி , டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலியை காணொலி காட்சி மூலம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.
‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம்.
கடைகளில், மால்களில் அல்லது சூப்ப மார்க்கெட்டுகளில் ‘க்யூஆர்’ குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். இதர கட்டணங்களையும் செலுத்தலாம். இந்த ‘டாக் பே’ செயலியை மத்திய தகவல் தொடர்பு, மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர்கூறுகையில் " கொரோனா முடக்க காலத்தில், இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும், டிஜிட்டல் மூலமாக பல சேவைகளை வழங்கியது. தற்போது ‘டாக் பே’ தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், தபால் துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது.
இந்த புதுமையான சேவை, வங்கி சேவைகளை மட்டும் அல்ல, ஆன்லைன் தபால் சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் வீட்டிலிருந்து தபால் சேவைகளை ஆர்டர் செய்ய முடியும், நிதி சேவைகளையும் பெற முடியும்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல், வீட்டிலேயே தபால் நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் மூலம், பிரதமரின் தொலைநோக்கான தற்சார்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறியுள்ளது. இவ்வாறு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.