ரயில் தண்டவாளத்தில் PUBG விளையாடியபடி நடந்து சென்ற இரு சிறுவர்கள் : சரக்கு ரயில் மோதி உயிரிழப்பு !
By : Dhivakar
உத்தரப் பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் இரு சிறுவர்கள் பப்ஜி விளையாடிக் கொண்டு சென்ற போது சரக்கு ரயில் மோதி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்காலத்து சிறுவர்கள் மட்டும் இல்லாமல் பெரியோர்களும் மொபைல் விளையாட்டுகளில் நாட்டம் கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் அவர்களது சுய உணர்வையே இழந்து பப்ஜி என்னும் விளையாட்டில் மூழ்கியிருக்கின்றனர். இந்நிலையில் பப்ஜி விளையாட்டு இரண்டு சிறுவர்களது உயிர்களை பறித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 14 வயதுடைய கௌரவ் குமார் மற்றும் கபில் குமார் ஆகிய சிறுவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் ஒற்றை ரயில் தண்டவாளப்பாதை வழியே இருவரும் பப்ஜி விளையாடிக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது அப்போது, எதிரே வந்த சரக்கு ரெயில் இருவர் மீது மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்த ரெயில்வே போலீசார் உடனடியாக உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரி ஷஷி பிரகாஷ் கூறியதாவது:
மதுராச- காஸ்கஞ்ச் ஒற்றை தண்டவாளப் பாதை அருகே உடல்கள் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்ததில் சிறுவர்கள் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.
மேலும், உடல் அருகே பயன்பாட்டில் உள்ள நிலையில் செல்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதில், பப்ஜி விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது.சிறுவர்கள் இருவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.இந்நிலையில், ரெயில் வருவது கூட தெரியாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கி ரெயில் மோதி இறந்துள்ளனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Image : WallpaperAccess