கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்கள்! மத்திய போலீசாருக்கு அவசர செய்முறை விளக்கம்!
கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்கள்! மத்திய போலீசாருக்கு அவசர செய்முறை விளக்கம்!
By : Muruganandham M
கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களின் மாதிரிகள் குறித்து மத்திய காவல் படையினருக்கு அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்(CSIR), மத்திய இயந்திரப் பொறியியல் ஆய்வு மையம் (Central Mechanical Engineering Research Institute (CMERI) செய்முறை விளக்கம் அளித்தது.
கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களில்(Mob Control Vehicles (MCV), மூன்று வகையை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின்(CSIR), மத்திய இயந்திரப் பொறியியல் ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது. சிறிய, நடுத்தர ரகம் மற்றும் பெரிய ரகங்களில், கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களின் மாதிரிகள் உருவாக்கப்பட்டன.
இதன் செய்முறை விளக்கம், மத்திய ஆயுத படை போலீஸ்(சிஆர்பிஎப்) குழுவினருக்கு சமீபத்தில் காட்டப்பட்டது. குருகிராமில் உள்ள சிஆர்பிஎப் மைதானத்தில் இந்த செய்முறை விளக்கம் நடந்தது. சட்டம், ஒழுங்கு நிலையை சமாளிக்க, துணை ராணுவப்படையினருக்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த வாகனங்களில் உள்ளன.
பெரிய ரக வாகனங்கள் 7.5 டன் பொருட்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது. நடுத்தர ரக வாகனங்கள் 2.5 டன் பொருட்களை ஏற்றிச் செல்லும் திறன் வாய்ந்தது. சிறிய வாகனங்கள் டிராக்டர் அடிப்படையிலான வாகனம் ஆகும்.
இந்த வாகனங்களில் தண்ணீர் மற்றும் நுரையை பீய்ச்சி அடிக்கும் கருவிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் துப்பாக்கிகள், கண்காணிப்பு கருவிகள், கேமிராக்களுடன் கூடிய எலக்ட்ரானிக் திரைகள், ஜிபிஎஸ் கருவிகள் உட்பட பல நவீன அம்சங்கள் இந்த வாகனங்களில் இடம் பெற்றுள்ளன.