கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்.!
பாதுகாப்புபடையை சேர்ந்த கோப்ரா கமாண்டோ வீரர் ஒருவர் காணாமல் போனார்.
By : Thangavelu
சத்தீஸ்கர் என்கவுண்டரின்போது, பாதுகாப்பு படைவீரர் ஒருவரை கடத்தி சென்ற நக்சலைட்டுகள், தற்போது அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3ம் தேதி நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த சமயத்தில் வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து திடிரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
இந்த துப்பாக்கிச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. இதில் சுமார் 22 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். நக்சலைட்டுகளும் சிலர் உயிரிழந்தனர். இந்த சமயத்தில் பாதுகாப்புபடையை சேர்ந்த கோப்ரா கமாண்டோ வீரர் ஒருவர் காணாமல் போனார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்சலைட்டுகள் தரப்பிலிருந்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பீஜப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என நக்சலைட்டுகள் தெரிவித்தனர். இதனிடையே காணாமல் போன பாதுகாப்புப் படைவீரர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட பாதுகாப்புப் படைவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் இன்று வெளியிட்டுள்ளனர். அவரது பெயர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என தெரியவந்துள்ளது. அவரை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.