பாசனக் கிணறுகள் வெட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 12.25 இலட்சம் வரை மானியம்.!
பாசனக் கிணறுகள் வெட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு 12.25 இலட்சம் வரை மானியம்.!

By : Rama Subbaiah
இந்தியாவில் ஆற்றுப்பாசனம் மிகவும் குறைவாக உள்ள மாநிலங்களாக தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ளன. இங்கு கிணற்றுப் பாசனம் அதிமாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒரு பெரிய கிணறு ஆழமாக வெட்ட பல லட்சங்கள் செலவாகிறது. இதனால் மிக குறைந்த அளவில் நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளால் கிணறு வெட்ட போதுமான பொருளாதார வசதி இல்லை.
இந்த நிலையில் குறு விவசாயிகளின் இந்த கவலையை உணர்ந்த நரேந்திர மோடி அரசு குறு விவசாயிகள் மூன்று பேர் வரை சேர்ந்து அரசு மானியத்தில் புது கிணறு அமைக்க உதவும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-21 - ம் ஆண்டுக்கான இத்திட்டத்தின் கீழ் பயனடைய வறட்சியான பகுதிகளில் கஷ்டப்படும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தங்களது விவசாய நிலங்களில் இத்திட்டத்தின்கீழ் கிணறு அமைக்க சிறு, குறு விவசாயிக்கான சான்று, ஊரக வேலை உறுதித் திட்ட வேலை அடையாள அட்டை மற்றும் நிலவுடைமை உள்ளிட்ட இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உறிஞ்சப்பட்ட இடங்கள் என மத்திய நீர்வள ஆதார அமைப்பினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை மேற்கொள்ளலாம். குறிப்பாக 3 குறு விவசாயிகள் குழுவாக இணைந்து தங்களுக்குள் நீரை பங்கு பிரித்துக் கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க வேண்டும்,
அதன் அடிப்படையில் விவசாய பயன்பாட்டிற்கான சமுதாய திறந்தவெளி கிணறை இந்த திட்டத்தின் கீழ் 12.25 லட்ச ரூபாய் அரசு மானியத்தில் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் கிணறுகள் அமைக்க முதன்முதலாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விவசாயிகளுக்கு இதற்கான செய்திக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
