லடாக் எல்லையில் தமிழக வீரர் வீரமரணம்: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
லடாக் எல்லையில் தமிழக வீரர் வீரமரணம்: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

By : Saffron Mom
இந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவ வீரர்களுக்கும் சீன இராணுவத்திற்கும் நடைபெற்ற மோதலில் இந்தியா இராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் தங்கள் உயிர்களை நாட்டிற்காகத் தியாகம் செய்தனர். இந்நிகழ்வுக்குப் பிறகு சீனாவிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. மேலும் லடாக் எல்லைப் பகுதியில் உயிரிழந்த வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களது நினைவுச் சின்னமும் லடாக் பகுதியில் வைக்கப்பட்டது.
கடந்த 5 ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள சின்ன கம்மியபட்டு பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரித்திவிராஜா திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
இவரது தந்தை கணபதியும் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். பிரித்திவிராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் பணிப்பெற்றார். லடாக் எல்லைப் பகுதியில் பணியாற்றிவந்தார். இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு அவரது உடல் சென்னைக்குக் கடந்த 7 ஆம் தேதி தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின் சென்னையிலிருந்து தனி வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டது. நேற்று மாலை வந்திறங்கிய பிரித்திவிராஜா உடலைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழத் தொடங்கினர். பின் அந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முதலியோர் பிரித்திவிராஜா உடலுக்கு மலர் அஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜா தந்தை கணபதிக்குச் சொந்தமான நிலத்தில் உரிய மரியாதைகளுடன் 21 குண்டுகள் முழங்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
