உதய்ப்பூர் தையல் தொழிலாளிபடுகொலை சம்பவம் - களமிறங்கும் என்.ஐ.ஏ! நாடு முழுவதும் விசாரணையா?
உதய்ப்பூர் தையல் தொழிலாளியை மர்ம இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
By : Mohan Raj
உதய்ப்பூர் தையல் தொழிலாளியை மர்ம இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவத்தில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம், மால்டா என்ற நகரில் ஜவுளி கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு இளைஞர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர்.
இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர் கண்ணையா லால் என்பதும் அப்பகுதியில் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டனர் அதில் யாரேனும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக ஆயுதங்களை காண்பித்து அந்த வீடியோவில் எச்சரித்துள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் எதிரொலியாக பல இடங்களில் வன்முறை சம்பவம் நடைபெறுவதை தடுக்க ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர், இது குறித்து சர்வதேச அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு உள்ளதா என ஆராய தேசிய புலனாய்வு அமைப்பை விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.