கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது - பின்னணியில் பினராயி விஜயனா?
வயநாட்டில் ராகுல்காந்தி அலுவலகம் எஸ்.எப்.ஐ இயக்கத்தினரால் சூறையாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
வயநாட்டில் ராகுல்காந்தி அலுவலகம் எஸ்.எப்.ஐ இயக்கத்தினரால் சூறையாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி'யாக தேர்வானார். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் வயநாடு கல்பற்றா பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் எக்கோ சென்சிட்டிவ் சோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது, அப்போது சுமார் 40க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் நடைபெற்ற பேரணியில் திடீரென சிலர் கூட்டத்தில் இருந்து விலகி ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து ராகுல் காந்தியின் போட்டோ, மகாத்மா காந்தி போட்டோ ஆகியவை அடித்து உடைக்கப்பட்டது.
அலுவலகத்தில் இருந்த கோப்புகள், இருக்கைகள் எல்லாம் அடித்து உடைக்கப்பட்டது. ராகுல் இருக்கையை உடைத்து வாழை மரங்களையும் நட்டு வைத்தனர். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மூன்று பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ராகுல்காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய எஸ்.எப்.ஐ தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதேசமயம் ராகுல்காந்தி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது போலீசார் வேடிக்கை பார்த்ததாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் பின்னணியில் சொப்னா சுரேஷ் முதல்வர் பினராயி விஜயன் மீது கடத்தல் குற்றம் சாட்டி அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்த்து போராட்டம் நடத்தியது காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.