வரப்போகுது 5G சேவை, கட்டணங்கள் அதிகமா? - மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
இந்தியாவில் 5G சேவை கட்டணம் அதிகமாக இருக்குமா என மக்களிடம் அச்சம் நிலவி வந்த நிலையில் அதற்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
By : Mohan Raj
இந்தியாவில் 5G சேவை கட்டணம் அதிகமாக இருக்குமா என மக்களிடம் அச்சம் நிலவி வந்த நிலையில் அதற்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் 5G சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5G சேவை நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5G சேவை முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 20 முதல் 25 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய தகவல் தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதற்கட்டமாக பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், புனே, சென்னை, காந்திநகர், ஜாம்நகர், மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட 13 நகரங்களுக்கு வழங்கப்படும் எனவும் பின்னர் இந்த சேவை பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டணங்களை பற்றி கூறிய அவர், 'உலக சந்தையை விட இந்தியாவில் 5G தேவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்' என்ற தகவலையும் அளித்தார், 4G கட்டணங்களுக்கு இணையாகக் 5G கட்டணங்களும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.