மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில்!
மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில்!

மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்தை பிரதமர் காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், ஹரியாணா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பிரிவு தொடங்கப்படுவதன் மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும். முன்னதாக, 2020 டிசம்பர் 29ம் தேதி கிழக்கு சரக்கு ரயில் பாதையின் புதிய பாவ்பூர்-புதிய குஜ்ரா பிரிவை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
இரட்டை அடுக்கு பெட்டக ரயிலை இயக்குவதன் மூலம் கூடுதலாக 25 டன் சுமையைக் கொண்டு செல்ல முடியும். இதனை DFCCIL - லுக்காக ஆர்டிஎஸ்ஓ-வின் ரயில் பெட்டி துறை வடிவமைத்தது. இந்த வடிவமைப்பு அதிக அளவிலான சுமையை, சீரான வகையில் ஏற்றிச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரட்டை அடுக்கு பெட்டக ரயில், தற்போதைய இந்திய ரயில்வே போக்குவரத்துடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு எண்ணிக்கையில் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் படைத்தது.
DFCCIL அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சரக்கு ரயில்களை இயக்கும். தற்போது இந்திய ரயில்வே பாதைகளில் அதிகபட்சம் மணிக்கு 75 கி.மீ வேகத்திலேயே சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் சராசரி சரக்கு ரயில்களின் வேகமும் மணிக்கு 26 கி.மீ என்ற அளவிலிருந்து பிரத்யேக சரக்குப் பாதையில் மணிக்கு 70 கி.மீ ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.