காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே முர்முவிற்கு வாக்களித்தவர்கள் - நீளும் பட்டியல், கடுப்பில் காங்கிரஸ் தலைமை
நேற்று நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் அணி மாறி திரௌபதி முர்முவிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் வாக்களித்தது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Mohan Raj
நேற்று நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் அணி மாறி திரௌபதி முர்முவிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் வாக்களித்தது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டார், மேலும் காங்கிரஸ் சார்பில் எஸ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் அணி மாறி திரௌபதி முர்முவிற்கு வாக்களித்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக எஸ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குஜராத் தேசியவாத காங்கிரஸ் கட்சி, எம்.எல்.ஏ கந்தல் எஸ்.ஜடேஜா பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஒடிசா காங்கிரஸ் எம்.எல்.ஏ முகமது மோக்கிம், ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ குலதீப் பிஷ்னாய் ஆகியோரும் முர்முவிற்கே வாக்களித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் நீளும் பட்டியலில் அசாமில் 20க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் முர்முவிற்கு வாக்களித்து இருக்கலாம் என அகில இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக கூட்டணி முன்னணி எம்.எல்.ஏ கரிமுதீன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் காங்கிரசுக்கு மேலும் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.