"இன்றைய ஸ்டார்ட் அப் தான் நாளைய MNC நிறுவனங்கள்" - இளைஞர்களை ஊக்குவித்த பிரதமர் மோடியின் பேச்சு!
"இன்றைய ஸ்டார்ட் அப் தான் நாளைய MNC நிறுவனங்கள்" - இளைஞர்களை ஊக்குவித்த பிரதமர் மோடியின் பேச்சு!
By : Bharathi Latha
வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் ஒடிசாவில் IIM சம்பல்பூரின் நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய பிரதமர், "இது சரியான நேரம். இன்றைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் நாளைய பன்னாட்டு நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் 2 மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களில் உருவாகின்றன. இந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களை நிறுவுவதில் பெரிய பங்கு வகிக்கும்" எனக் கூறினார்.
ஸ்டார்ட் அப்களுக்கான நோக்கம் விரிவடைந்து வருவதாகக் கூறிய மோடி, "புதிய சாத்தியக்கூறுகளுக்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பிராண்ட் இந்தியாவுக்கு ஒரு புதிய உலகளாவிய அடையாளத்தை வழங்க வேண்டியது நம் இளைஞர்கள் பொறுப்பு" என்று மேலும் கூறினார்.
IIM சம்பல்பூர் தனது பலத்தை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், புதிய வளாகம் ஒடிசாவின் இளைஞர்களின் திறனை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதலமைச்சர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், தர்மேந்திர பிரதான், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.