சென்னை மாநகரின் பாரம்பரிய பெருமைகள்: மார்கழி திருவிழாவில் வெங்கைய நாயுடு புகழாரம்.!
சென்னை மாநகரின் பாரம்பரிய பெருமைகள்: மார்கழி திருவிழாவில் வெங்கைய நாயுடு புகழாரம்.!

By : Rama Subbaiah
மார்கழி திருவிழாவை ஹைதராபாத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு இந்தியாவில் இசை மற்றும் நடனத்தின் சிறப்பான பாரம்பரியத்தைப் பற்றி எடுத்துரைத்ததோடு, தற்போதைய கடினமான காலங்களில் அவற்றுக்கு புத்துயிர் அளிப்பது குறித்தும் பேசினார்.
சென்னையின் புகழ்பெற்ற டிசம்பர் இசை மற்றும் நடனத் திருவிழா பாரம்பரியத்தை இணையத்தின் மூலம் உயிர்ப்புடன் வைப்பதே ‘யுவர்ஸ் ட்ரூலி மார்கழி திருவிழா’வின் நோக்கமாகும்.

மென்சக்தி குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர், இசை மற்றும் நடனத்தின் மூலம் அகிம்சை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை, ‘வசுதேவ குடும்பகம்’ என்னும் இந்திய தத்துவத்தை சார்ந்து உலகம் முழுக்க பரப்பலாம் என்று கூறினார்.
சென்னையுடனான தனது நீண்டகால தொடர்பு குறித்து பேசிய அவர், கர்நாடக இசையின் தலைநகரம் சென்னை என்றார். புதுமையிலும், பாரம்பரியத்திலும் சிறந்து விளங்கும் தனித்துவமான மாநகரமாக சென்னை திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார்.

பெருந்தொற்றின் போது கலைஞர்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வெங்கைய நாயுடு, ‘யுவர்ஸ் ட்ரூலி மார்கழி திருவிழா’ போன்ற முன்னெடுப்புகள் மூலம் அவர்கள் பார்வையாளர்களை உலகம் முழுக்க சென்றடையலாம் என்றார்.
கொவிட் போன்ற காலகட்டத்தில் இந்திய இசை மற்றும் நடனத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகவும், சிவபெருமானின் அம்சமான நடராஜர் பிரபஞ்சத்தின் நடனக் கலைஞராக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
நடனம், நாடகம் மற்றும் இசை ஆகியவை இந்தியா உலகத்துக்கு வழங்கிய கொடை என்று திரு நாயுடு கூறினார். இசை மற்றும் நடனத்தை பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக ஆக்க வேண்டுமென்றும், புதிய கல்வி கொள்கை இது தொடர்பான முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் கூறினார். இதில் தமிழர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறிய அவர் இது தொடர்பாக வருங்கால சந்ததிகள் அறிய இனி வாய்ப்பு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
