தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை அமைச்சகம்.!
தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை அமைச்சகம்.!
![தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை அமைச்சகம்.! தடுப்பூசி போடுவது கட்டாயமில்லை.. சுகாதாரத்துறை அமைச்சகம்.!](https://kathir.news/static/c1e/client/83509/uploaded/91b1099006cd7cc867ac3d046321628d.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் கடந்த ஓராண்டாக போராடி வந்தது. அதற்கு பலனாக சில நாடுகள் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு கேள்வி, பதில் பாணியில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட பிறகுதான், அது அறிமுகம் செய்யப்படுகிறது.
விரைவில் ஒரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். மற்ற நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிபோன்று, நமது தடுப்பூசியும் பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல. விருப்பப்பட்டால் மட்டும் போட்டுக்கொள்ளலாம்.
இருப்பினும், கொரோனாவுக்கு எதிராக தன்னையும், தன் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் இதை போட்டுக்கொள்வது நல்லது. ஏற்கனவே கொரோனா வந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். புற்றுநோய், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய் இருப்பவர்களும் போட்டுக்கொள்ளலாம். அவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கிறது.
ஒரு டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் போடப்பட வேண்டும். இப்படி முழுமையாக போடப்பட்டால் தான் பலன் கிடைக்கும். 2வது டோஸ் போட்ட 2 வாரங்கள் கழித்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு சிலருக்கு லேசான காய்ச்சல், தடுப்பூசி போட்ட இடத்தில் வலி உள்ளிட்ட பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.