முன்னாள் மத்திய அமைச்சர் ஜனா கிருஷ்ண மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி.பாக்கியலட்சுமி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார்!

By : Mohan Raj
முன்னாள் மத்திய அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி.பாக்கியலட்சுமி அம்மையார் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.
சிறு வயதில் இருந்து RSS'ல் இணைந்து தொண்டு செய்தவரும், பின்னர் பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா என்று அரசியலில் மிக நீண்ட வரலாறு கொண்டவருமான முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி.பாக்யலட்சுமி அம்மா இன்று காலை 8.30 மணியளவில் வயது முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.
தாராபுரத்தில் பிறந்தவர் இவர், அங்கேயே வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அதே ஊரில் ஆசிரியையாக பணியாற்றியவர்,
பாக்கியலட்சுமி அம்மாவின் தகப்பனார் தாராபுரத்தில் மிக முக்கிய வழக்கறிஞராக திகழ்ந்தார்.
ஆசிரியை, கர்நாடக சங்கீத வித்வான், தேசபக்தை என்ற பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த பாக்யலக்ஷ்மி அம்மா. ஒரு பெரிய அரசியல் கட்சியின் அகில பாரத தலைவர் மனைவி, சட்ட அமைச்சரின் மனைவி என்ற அகந்தையோ, பெருமையோ கொஞ்சம் கூட அவர் நடவடிக்கையில் தெரியாது. அந்த அளவிற்கு தன்னை ஒரு சாதாரண குடும்பத்தலைவியாகவே செதுக்கி வாழ்ந்து மறைந்துள்ளார் இவர்.
ஜன சங்க காலம் தொட்டு கட்சியின் முழுநேர ஊழியராக இருந்தவர் ஜனா கிருஷ்ண மூர்த்தி அவர்கள். அப்போது குடும்பம் நடத்த கட்சியில் இருந்து வரும் ஊதியம் மிகவும் சொற்பத் தொகை. ஆனால் அதற்குள் குடும்பம் நடத்தி தன் குழந்தைகளையும் படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர் பாக்யலக்ஷ்மி அம்மையார் அவர்கள்.
உடல்நலக்குறைவால் சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாக்கியலட்சுமி அம்மையார் இன்று காலை சுமார் 8.30 மணி உயிர் பிரிந்தது.
இன்று மாலை 4 மணிக்கு மேல் பாக்கியலட்சுமி அம்மாவின் இறுதி ஊர்வலம் அவர்கள் இல்லத்திலிருந்து தொடங்குகிறது.
மறைந்த பாக்கியலட்சுமி அம்மையார் அவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
