சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லை : பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்தயுள்ள அமெரிக்க நிறுவனம்.!

By : Bharathi Latha
தற்போது உள்ள டிராபிக் ஜாம்களுக்கிடையில் ஓரிடத்திலிருந்து இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மிகவும் சவாலாக தான் உள்ளது. இதில் சாலைகளில் பல்வேறு விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து முற்றிலும் விடுபட, தற்போது ஒரு புதிய பறக்கும் டாக்ஸி சேவையை அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. நம்ப முடியவில்லையா? ஆனால் உண்மையில் பறக்கும் டாக்ஸிகளை இந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் உள்ள ஆர்ச்சர் ஏவியேஷன் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான டாக்ஸியின் சிறப்பு அம்சங்கள் குறித்து கலிபோர்னியாவில் விளக்கம் அளிக்கபட்டது. அதாவது இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு இது தீங்கு ஏற்படுத்தாது. ஹெலிகாப்டர் போன்ற வாகனத்தில் செங்குத்தாக மேல் எழும்பும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள மேக்கர், பின்னர் விமானம் போன்று பறக்கும் திறனுடையது. மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த குட்டி விமானத்தை முதல் கட்டமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களுக்கு இயக்க தற்பொழுது திட்டமிடப் பட்டுள்ளது.
50 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,000 வசூலிக்க ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், 2024 ஆம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்ஸி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள மேக்கர் விமானத்திற்கு அனுமதி கோரி அமெரிக்க விமானத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம், சில மாதங்களில் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறது.
