மிக அதிகமான முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிர் பிழைத்த அதிசய மனிதர்!

By : Bharathi Latha
உலகில் உள்ள அனைத்து மக்களில் ஒரு சிலருக்கு மட்டும் தான் இரண்டு முறை அல்லது மூன்று முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. குறிப்பாக ஒவ்வொரு அலையின் போதும், பாதிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்த நபர் மட்டும் சுமார், உலகின் முதல் முறையாக 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்து உள்ளார். நம்ப முடியவில்லை, இருந்தாலும் இது உண்மைதான்.
உலக நாடுகளில், பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஓர் 72 வயது மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்ததுதான். டேவ் ஸ்மித் என்கிற வாகன பயிற்சியாளரான இவர்தான் அந்த நபர். கடந்த 10 மாதங்களில் 43 முறை இவரது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் ஏழு முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் டேவ் ஸ்மித் தனக்கு சவப்பெட்டியை தயார் செய்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் இறக்கவில்லை. பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி வெளியேறியுள்ளது. இதன்மூலமாக உலகிலேயே அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
