தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்த ஆளுநர் தமிழிசை
சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்தார் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
By : Karthiga
சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்திற்கு சென்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அருகில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்றார்.அவரை கருணாநிதியின் மகள் செல்வி வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கே உடல் நலிவுற்ற நிலையில் ஓய்வெடுத்து வரும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவரும் அடையாளம் தெரிந்து கொண்டு "குமரி அனந்தனின் மகளா?" என்று கேட்டதுடன் கவர்னராக பதவி ஏற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கருணாநிதி அங்கு இருந்த காலத்தில் அவரை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி சென்றபோது அவருடன் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வந்ததையும் தயாளு அம்மாள் நினைவு கூர்ந்தார் .
இந்த நிகழ்வை தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் கருணாநிதியை சந்தித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.