ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் - அசத்தும் ரயில்வே நிர்வாகம்
ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
By : Karthiga
ரயில்களில் கேட்டரிங் சேவைகளை மேம்படுத்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்திற்கு(ஐ.ஆர்.சி.டி.சி)ரயில்வே வாரியம் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலா ஐ.ஆர்.சி.டி.சிக்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கை குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு வகைகளில் பருவ கால சுவையான உணவுகள், பண்டிகை கால உணவுகள், விருப்பங்களுக்கு ஏற்ப உணவுப் பொருள்களும் உள்ளடங்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு வகைகள், குழந்தைகளுக்கான உணவுகள், ஆரோக்கிய உணவு விருப்பங்கள், ஊட்டச்சத்து மிக்க உள்ளூர் தயாரிப்புகள் உட்பட பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுக்கும் வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய உணவு வகைகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.