லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா கோலாகலம் - நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி யாத்திரை
By : Mohan Raj
ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் தைப்பூச திருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரிகளை தலையில் ஏந்தி லிங்கபைரவிக்கு பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.
இந்த யாத்திரையில், உள்ளூர் கிராம மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் ஜாதி, மத பாகுபாடு இன்றி கலந்து கொண்டனர். ஆண்கள் கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்ட தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஆலாந்துறையை அடுத்த கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணி புறப்பட்ட இந்த யாத்திரை நண்பகல் 12 மணியளவில் லிங்கபைரவியை வந்தடைந்தது.
வரும் வழியில் ஆலாந்துறை, மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், செம்மேடு என பல்வேறு இடங்களில் அங்குள்ள கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இது தவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த 21 நாட்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர். அவர்கள்
அனைவரும் இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய், தானியங்கள், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர்.