இந்திய மீனவர்களின் நலனுக்காக இலங்கை பிரதமரிடம் பேசிய பிரதமர் மோடி!!

By : G Pradeep
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய இந்தியாவிற்கு வந்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து நரேந்திர மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இலங்கை பிரதமரின் வருகை தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும், இரண்டு பிரதமர்களும் சந்தித்து கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமை, மீனவர்களின் நலன் போன்றவற்றை குறித்து பேசியதாக பதிவிட்டுள்ளார்.
இந்த இரண்டு நாடுகளின் உறவு நாட்டு மக்களின் செழிப்புக்கும், நலனுக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டு பிரதமர்களின் சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கை பிரதமரின் வருகை பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும், பன்முகத்தன்மை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை மற்றும் இந்தியாவின் உறவு மிகவும் புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்று அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி இந்த நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிபாட்டை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் அதிபர் அனுர குமார திசநாயக்கருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஒத்துழைப்புக்கு ஆவலோடு காத்திருப்பதாக கூறினார். இந்நிலையில் தமிழக முதல்வர் இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்டு இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
