தாயுமானவர் திட்டம் குறித்து புகார் அளிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள்!! பரவி வரும் செய்தி!!

By : G Pradeep
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல்வரின் தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை பெறுவதில் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காக ரேஷன் பொருட்களை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி சிறிது காலமே ஆகியுள்ள நிலையில் தொடர்ச்சியாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 70,311 பேர் மாற்றுத்திறனாளிகளாகவும் மற்றும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களாக உள்ளனர். இந்நிலையில் அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்தது. இதன் கீழ் வருபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் பணியாளர்கள் மின்னணு தராசில் எடை போட்டு வீட்டுக்களுக்கே சென்று பொருட்களை தர வேண்டும்.
ஆனால் இத்திட்டம் தொடங்கியதில் இருந்து புகார்கள் தான் வந்த பயமே இருக்கிறது என்றும் இதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் 75 வயதாகிய முதியவர் ஒருவர் எனக்கு வீட்டுக்கே வந்து பொருட்கள் தருவதாக மெசேஜ் மட்டுமே வந்திருப்பதாகவும், பொருள் இன்னும் வராததால் நேரடியாக தானே கடைக்கு வந்துவிட்டு பொருள் வாங்கி செல்வதாகவும், இத்திட்டமானது தேர்தல் ஆதாயத்திற்காக கொண்டுவரப்பட்டதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இத்திட்டமானது வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு பயன் தராது எனவும் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறாது எனவும் கூறப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர்.
இதைத் தொடர்ந்து கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சதீஷ், இத்திட்டத்தின் மூலம் 86,500 பேர் பயனடைகின்றனர் என்றும், திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை அப்படி புகார் அளித்தாலும் அதனை உடனடியாக சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது போன்ற செய்தி அடிக்கடி சமூக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பரவி வருவதும் நடந்து வருகிறது.
