மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பாரதிய மொழிகளின் தினமாக கொண்டாடி வரும் மத்திய அரசு!!

By : G Pradeep
“பாரதிய மொழிகள் தினம்: மொழிகள் பலவாயினும் சிந்தனை ஒன்றே”
தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தை மாண்புமிகு பாரத பிரதமர் தலைமயிலான மத்திய அரசு பாரதிய மொழிகள் தினமாக அறிவித்து அரசாணை இயற்றியது. அதன் படி மத்திய கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கை மூலமாக டிசம்பர் 11 ஆம் தேதியை , 2023 -ஆம் ஆண்டு தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது. இந்த நாள் வெறும் கொண்டாட்டமல்ல; இது இந்தியாவின் ஆத்மாவான மொழி ஒருமைப்பாட்டைப் போற்றுவதற்கும், மகாகவி பாரதியாருக்கு நாம் செலுத்தும் உயரிய மரியாதைக்கும் ஒரு சான்றாகும். அன்றைய கடினமான கால கட்டத்தில் மக்களிடம் சுதந்திர தாகத்தை தனது உணர்ச்சி மிக்க தேச பக்தி பாடல்கள் மூலம் உண்டாக்கியதோடு மட்டுமல்ல, தேசிய மொழிகளின் மத்தியில் உள்ள ஒத்த சிந்தனையை பரப்பிய தூதுவராக விளங்கினார்.
பாரதியார், ஒரு கவிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி, சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் மொழியியல் நல்லிணக்கத்தின் தீவிர ஆதரவாளர். அவரது பிறந்தநாள், பாரதிய மொழிகள் தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பல முக்கிய காரணங்கள் உள்ளன. பாரதியார் ஒரு பன்மொழிப் புலவர். அவர் தமிழைத் தன் உயிராக நேசித்தாலும், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார். மொழிகள் மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக, இணைக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார்.
"செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று பாடியதன் மூலம், இந்தியத் தாயின் பல்வேறு மொழிகளைக் கடந்து, அதன் ஆழமான சிந்தனை ஒருமையைக் கோடிட்டுக் காட்டினார். இந்த வரிகள், இந்தியா ஒரு தேசம், பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், அடிப்படை ஒற்றுமை கொண்டது என்பதை உணர்த்தின. பாரத்தின் ஆன்மிகம் ஒன்றுதான்! ஆத்மா ஒன்று தான். சிந்தனை ஒன்று தான். மொழி என்பது தொடர்பு கொள்ளாத தேவையான சாதனம் மட்டுமல்ல, ஒரு பண்பாட்டுப் பொக்கிஷத்தை தலைமுறை தலைமுறைகளுக்கு கடத்தும் ஒரு அற்புதமான கருவி என்று நாமும் உணர வேண்டும்.
தனது புரட்சிகரமான கவிதைகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்தார். அவரது பாடல்கள், விடுதலை வேட்கையை மக்களிடம் தூண்டி, தேச பக்தியை வளர்த்தன. மொழி, சாதி, பாலின வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதைத் தன் எழுத்துக்களில் வலியுறுத்தினார். பெண்களின் விடுதலை, கல்வி, அனைவருக்கும் சம உரிமை போன்ற கருத்துக்களைத் தன் எழுத்துக்கள் மூலம் மக்கள் நெஞ்சினில் விதைத்தார்.
“பாரதிய மொழிகள் தினம்: நோக்கம் மற்றும் முக்கியத்துவம்“
இந்த தினத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைத்து தாய்மொழிகள் மற்றும் பிற இந்திய மொழிகளைப் போற்றுவதும், அவற்றைக் கற்றுக்கொள்வதற்கும் ஊக்குவிப்பதும் ஆகும். தேசிய கல்விக் கொள்கை கொள்கையின் பார்வையை ஒட்டி, இந்த தினம், மொழி நல்லிணக்கத்தை உருவாக்கவும், மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் ஒரு பாதையை வகுக்கும் .
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே இந்திய மொழிகளைக் கற்பதை ஊக்குவிக்க பல்வேறு நிகழ்ச்சிகள், விவாதங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெவ்வேறு மொழி பேசும் மக்கள் தங்கள் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்குகிறது. இது பரஸ்பர புரிதலையும், கலாச்சாரப் பரிமாற்றத்தையும் வளர்க்கும்.
ஒவ்வொரு இந்தியரும் தங்கள் தாய்மொழியிலும், பிற இந்திய மொழிகளிலும் பெருமிதம் கொள்ள இந்த நாள் தூண்டுகோலாக அமையட்டும். மொழி என்பது ஒருவரின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் அறிவு, வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் பொக்கிஷம்.
இந்த நாளில், மகாகவி பாரதியாரின் கனவான மொழி ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் பன்முகத்தன்மையின் அழகையும் நாம் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். மொழிகளை வெறும் தகவல் தொடர்பு கருவியாகப் பார்க்காமல், அவற்றை ஒற்றுமைக்கான பாலங்களாக, அறிவுக்கான சாளரங்களாக, பண்பாட்டுப் பொக்கிஷங்களாகப் போற்றுவோம்.
நமது குடும்பங்களில் தாய்மொழியில் பேசவும், நமது கையொப்பத்தை தமிழில் இடவும், நமது வியாபாரத் தளங்களில் அதிகளவு தாய்மொழியை பயன்படுத்தவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பெயர்ப்பலகைகள், அழைப்பிதழ்கள் அனைத்தும் தமிழில் அச்சிடுவோம் மற்றும் எல்லா சந்தர்பங்களிலிலும் தமிழுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்போம். சுப்ரமணிய பாரதியை போலவே நாமும் தேசத்தின் பல்வேறு மொழிகளைக் கற்க உறுதி ஏற்றிடுவோம். தேசத்தின் அனைத்து மொழிகளையும் நேசிப்போம். சில அரசியல்வாதிகளின் மொழிப்பிரிவினை என்னும் புதைக்குழியில் சிக்குண்டு வட பாரத்தின் மொழிகளை வெறுக்க வேண்டாம்.
மொழி ஒற்றுமையை வளர்ப்போம்!
வாழ்க பாரதம் !
வாழ்க தமிழ் !
