Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் நோக்கம்:வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாபஸ் - மத்திய அரசு அறிவிப்பு!

வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரியை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் நோக்கம்:வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாபஸ் - மத்திய அரசு அறிவிப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  24 March 2025 8:00 AM

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீதம் ஏற்றுமதி வரியை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. நுகர்வோர் விவகாரத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப வருவாய்த் துறையால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:-

குளிர் கால பயிர்களின் மகசூல் எதிர்பார்ப்பை விட அதிகரித்துள்ளது. இதை ஒட்டி மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வெங்காய விலை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளது. இச்சூழலில் நுகர்வோருக்கு மலிவு விலையை பராமரிக்கும் அதே விலையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும் அரசின் உறுதிபாட்டை இந்த முடிவு எடுத்துரைக்கின்றது என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வெங்காயம் மீது ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. வரிவிதிப்புக்கு பிறகும் நடப்பு நிதி ஆண்டின் மார்ச் 18-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 11.65 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த வெங்காய ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 1.85 லட்சம் டன் ஆக உயர்ந்தது. நடப்பு குளிர்கால பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக முந்தைய ஆண்டின் 1.92 கோடி டன்னை விட 18 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வெங்காயம் மீதான 20% ஏற்றுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News