ரூ. 108 கோடி ஹசிஸ் போதைப் பொருள் பறிமுதல்! இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல் காரர்கள் கைது!
By : Sushmitha
போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 30 கிலோ போதை பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றியதை அடுத்து சென்னையில் மேற்கொண்ட சோதனையிலும் போதை பொருட்களை கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 108 கோடி ரூபாய் மதிப்பிலான ஹசிஸ் என்ற போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் இலங்கைக்கு கடத்த முயன்ற போதை பொருட்களை கைப்பற்றியதோடு கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களுடன் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுக்கு பின்னால் யார் யார் உள்ளார்கள் எங்கிருந்து இவர்கள் இந்த போதைப் பொருட்களை கொண்டு வருகின்றனர் யாரிடம் கொண்டு சேர்ப்பதற்கு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறித்த விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Source : News Tamil 24×7