உலக அளவில் சுமார் 12% மக்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி கிடைத்துள்ளது : WHO வேதனை.!

By : Bharathi Latha
உலக நாடுகளில் கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய குடும்பங்களை இழக்க நேர்ந்தது. எனவே இவற்றில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி என்பது தீர்வாக இருந்து வருகிறது. ஆகவே அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவதற்கு உலக நாடுகள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் உலக மக்கள் தொகையில் இதுவரை சுமார் 12 சதவீதம் பேருக்கு மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளில் ஜூன் 10ம் தேதி நிலவரப்படி, கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பவர்களின் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் இதுவரை 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 93.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக இஸ்ரேலில் 63.1% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதையடுத்து கனடாவில் 62.7% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
அடுத்தபடியாக பிரிட்டனில் 62.7 சதவீதமாகவும், அமெரிக்காவில் இதுவரை 51.4 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் 13.7% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு நாளில் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை விட, மிக அதிக வேகத்தில் தொற்று பரவி வருகிறது. ஏழை நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது. அனைத்து மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள முடியும்" என WHO சார்பில் தெரிவித்து உள்ளது.
