விவசாயிகளுக்கு 16-வது தவணை.. ரூ.21,000 கோடியை விடுவித்த மோடி அரசு..
![விவசாயிகளுக்கு 16-வது தவணை.. ரூ.21,000 கோடியை விடுவித்த மோடி அரசு.. விவசாயிகளுக்கு 16-வது தவணை.. ரூ.21,000 கோடியை விடுவித்த மோடி அரசு..](https://kathir.news/h-upload/2024/02/29/1595472-adobeexpress2024022921404501.webp)
பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் ரூ.4900 கோடிக்கும் அதிகமான ரயில்வே, சாலை மற்றும் பாசனம் தொடர்பான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியின் போது பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டம் மற்றும் பிற திட்டங்களின் கீழ் பலன்களையும் அவர் வழங்கினார். மகாராஷ்டிரா முழுவதும் 1 கோடி ஆயுஷ்மான் அட்டைகளை விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பயனாளிகளுக்காக மோடி ஆவாஸ் கர்குல் யோஜனா திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இரண்டு ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். யவத்மால் நகரில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் இணைந்தனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சத்ரபதி சிவாஜியின் மண்ணுக்கு தலைவணங்குவதாகவும், மண்ணின் மைந்தர் பாபா சாஹேப் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் கூறினார். 2014-ம் ஆண்டிலும், 2019-ம் ஆண்டிலும் விழாக்களுக்கு தாம் வந்த போது மக்கள் அளித்த வரவேற்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜியின் 350 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், அவரது முடிசூட்டு விழாவை நினைவு கூர்ந்தார். தேசிய உணர்வுக்கும், வலிமைக்கும் அவர் அதிக முக்கியத்துவம் அளித்ததாகவும், தனது இறுதி மூச்சு வரை அதற்காக உழைத்ததாகவும் கூறினார். தற்போதைய அரசு அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். "கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளதாக" பிரதமர் தெரிவித்தார். "நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்த தாம் தீர்மானித்துள்ளதாகவும் தமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்த தீர்மானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு முக்கிய பிரிவினருக்கான முன்னுரிமைகளை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார். இந்த நான்கு பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வலிமையை உறுதி செய்யும்" என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சியின் திட்டங்களை நான்கு பிரிவினருக்கும் அதிகாரமளிக்கும் திட்டங்கள் என அவர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள், ஏழைகளுக்கு உறுதியான வீடுகள், கிராமப்புற மகளிருக்கு நிதி உதவி, இளைஞர்களின் எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார்.
Input & Image courtesy: News