இந்திய மாம்பழ மேனியா 2025: இந்திய விவசாயிகள் உற்சாகம்!

இந்தியாவிலிருந்து மாம்பழங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA), அபுதாபியில் ஒரு மாம்பழ ஊக்குவிப்பு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு 'இந்திய மாம்பழ மேனியா 2025' என பெயரிடப்பட்டு இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகமும் லூலூ குழுமமும் இணைந்து நடத்திய மாம்பழ விழாவானது இந்தியாவின் சிறந்த மாம்பழ வகைகளை சர்வதேச நுகர்வோருக்கு, குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள நுகர்வோருக்கு எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இதில் புவிசார் குறியீடு பெற்ற, பிராந்திய சிறப்பு வகை மாம்பழங்களான பனாரசி லாங்டா, தஷேரி, சௌசா, சுந்தர்ஜா, அம்ரபாலி, மால்டா, பாரத் போக், பிரபா சங்கர், லக்ஷ்மன் போக், மஹ்மூத் பஹார், விருந்தாவணி, ஃபாஸ்லி, மல்லிகா போன்ற வகை மாம்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியை ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், இந்திய மாம்பழங்களை உலக அளவில் ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய தளமாக இது அமைந்துள்ளது என்றார். இந்திய மாம்பழ விவசாயிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சந்தைகளுடன் இணைப்பதில் அபேடா முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.