பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்: ₹ 255 கோடி மதிப்பில் களம் இறங்கிய மோடி அரசு!

By : Bharathi Latha
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமையில் மும்பையில் இன்று "கடலோர மாநிலங்களின் மீன்வளக் கூட்டம" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், ஜார்ஜ் குரியன், பல்வேறு கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் மீன்வளத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹ 255 கோடி மதிப்பில் 7 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 5-வது கடல் மீன்வள கணக்கெடுப்பு செயல்பாடுகள், அரிய வகை ஆமைகளைப் பாதுகாப்பற்கான மேலாண்மை திட்டத்தின் வழிகாட்டுதல்கள், கப்பல் தகவல் தொடர்பு - ஆதரவு அமைப்புக்கான நிலையான நடைமுறை வெளியீடு போன்ற முக்கிய முன்முயற்சிகளும் இந்த மீன்வள மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் மீன் உற்பத்தியாளர் வளர்ச்சித் திட்டத்தின் (பிரதம மந்திரி மத்ஸ்ய மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா -PM-MKSSY) கீழ் பயனாளிகளுக்கு முதன்முறையாக நீர்வழி காப்பீட்டை மத்திய அமைச்சர் வழங்கினார். மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி, கிராம வாரியான தரவு கணக்கெடுப்பாளர்களை நியமித்தல், பயிற்சி அளித்தல், அதைத் தொடர்ந்து 3 மாதங்களில் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 5-வது கடல் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று தொடங்கின. முழு நடவடிக்கையும் டிசம்பர் 2025- க்குள் நிறைவடையும்.
இந்தியாவின் 5 வது கடல் மீன்வள கணக்கெடுப்பில் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் டிஜிட்டல் அடிப்படையிலான தரவு சேகரிப்புக்காக வியாஸ்-என்ஏவி (VyAS-NAV) என்ற கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. ஒன்பது கடலோர மாநிலங்களில் கடல் மீன்வள கணக்கெடுப்பை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு நிறுவனமான ஐசிஏஆர்-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தால் (சிஎம்எஃப்ஆர்.ஐ) வியாஸ்-என்ஏவி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மீனவ குடும்பம், மீன்பிடி கிராமம், மீன்பிடி படகு, உபகரணங்கள், நாடு முழுவதும் உள்ள மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் முழுமையான, துல்லியமான தகவல்களை ஆவணப்படுத்துவதில் இந்தக் கணக்கெடுப்பு கவனம் செலுத்தும். 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கடலோர மாநிலங்களில் 3477 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 575 உள்ளன. புதுச்சேரியில் 39 கிராமங்கள் உள்ளன
