அடுத்தடுத்து 3 முறை.. மின்கம்பியில் சிக்கிய தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்..
![அடுத்தடுத்து 3 முறை.. மின்கம்பியில் சிக்கிய தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்.. அடுத்தடுத்து 3 முறை.. மின்கம்பியில் சிக்கிய தஞ்சாவூர் பெரிய கோவில் தேர்..](https://kathir.news/h-upload/2024/04/20/1610192-adobeexpress2024042012582901.webp)
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தஞ்சாவூர் பெரிய கோவிலின் தேரோட்டத்தில் தேரின் மேல் துணியால் செய்யப்பட்ட அலங்காரத்தின் பகுதிகள் மூன்று முறை அடுத்தடுத்து மின் கம்பத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தஞ்சாவூர் பெரிய கோவில் தேரோட்டம் இன்று காலை 5:30 மணிக்கு துவங்கியது. தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேருக்கு புறப்பட்டு, காலை 6:15 மணிக்கு மேல் தியாகராஜசுவாமி தேரில் எழுந்தருளினர்.
தேரோட்டம் துவங்கிய போதே அலங்காரப் பந்தல் வலது புறத்தில் உள்ள கடையின் பெயர் பலகையில் சிக்கியதால், புறப்படுவதில் 15 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, வலது புற மின் கம்பத்தில் தேர் அலங்கார துணி பொருந்திய அமைப்புகள் சிக்கியது. இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட தேர் புறப்பட்டது. இருப்பினும், அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்கார தொம்பைகள் சிக்கியதால், கோவில் பணியாளர்கள் அந்த அலங்காரம் செய்யப்பட்ட கட்டைகளை அகற்றினர். இதனால் தேரோட்டம் தாமதமாகியது. இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது.
இதற்கிடையில் மின்கம்பத்தில் சிக்கிய தேரின் மேல் பகுதியில் உள்ள துணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் இருவரின் தலையில் இரும்பு கம்பி அடித்ததால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அலங்காரம் செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த ஆண்டு மாற்றப் பட்டதாகவும், இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்காத காரணத்தினால் விபத்து நடந்ததாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News