இந்தியா 4,000% வளர்ச்சியை எட்டிய சூரிய சக்தி திறன்: மத்திய அமைச்சர் பெருமிதம்!

By : Bharathi Latha
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று புதுதில்லியில் 11-வது இந்திய எரிசக்தி சேமிப்பு வாரம் - 2025 இல் உரையாற்றும் போது, இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 4,000% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இப்போது வலுவான 227 கிகாவாட்ஸ் ஆக உள்ளது என்று கூறினார். பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை பூர்த்தி செய்த முதல் ஜி20 நாடு இந்தியாவாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பல்லி கிராமத்தின் உதாரணத்தை திரு கோயல் மேற்கோள் காட்டினார். இது சூரிய சக்தி மற்றும் எரிசக்தி செயல்திறனைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் கார்பன் வெளியேற்றமற்ற நடுநிலை பஞ்சாயத்தாக மாறியுள்ளது. யஷோபூமியில் உள்ள ஐஇஎஸ்டபிள்யூ அரங்கானது கூரை சூரிய சக்தி நிறுவல்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி-திறனுள்ள உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலைத்தன்மையின் மாதிரியாகவே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் உற்பத்தி முன்னேற்றத்தை எடுத்துரைத்த திரு கோயல், நாட்டின் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதி திறன் கிட்டத்தட்ட 38 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் ஒளிமின்னழுத்த செல் திறன் 21 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறினார். 1 கோடி வீடுகளில் கூரை மீது சூரிய மின்கலங்களை பொருத்தி, அவர்களை மின்சாரத்தில் தன்னிறைவு அடையச் செய்வதையும், மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிரதமர் சூர்யக்கூரை திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் விவசாயப் பொருளாதாரத்தில் சூரிய மின்கலங்களை விரிவுபடுத்துவதை ஆதரிக்கும் பிரதமரின் திட்டம் பற்றியும் அவர் பேசினார். இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பேட்டரிகள், பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு, நீர் மின் சேமிப்பு அல்லது புவிவெப்பம் போன்ற சேமிப்பு தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
