அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் திடீரென்று நடத்தப்பட்ட சோதனை! 7 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்!

By : G Pradeep
திண்டுக்கல் மாவட்டம் வள்ளலார் நகரில் இருக்கும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி அவருடைய கணவர் துவாரநாதனுடன் வசித்து வரும் நிலையில், கணவர் வத்தலகுண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் ஓட்டுப்பட்டியில் அலமேலு மில்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மில் மற்றும் வீட்டில் நேற்று மதியம் 2 அளவில் கோவையிலிருந்து வந்த பெண் அதிகாரி உட்பட 4 ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை இட்டனர்.
இச்செய்தியை அறிந்து மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் திமுகவினர் வீட்டின் முன் குவிந்த நிலையில், துணை மேயர் வீட்டிற்குள் செல்ல முயன்ற பொழுது அதிகாரிகள் அவரை வெளியில் அனுப்பினர். பிறகு மாலை 6:00 மணி அளவில் வீட்டிற்கு வந்த ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சியை அதிகாரிகள் உள்ளே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 8 மணி வரை மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்ததாகவும், வீட்டிற்கு வெளியில் திமுகவினர் கூச்சலிட்டுக் கொண்டதை தொடர்ந்து வீட்டிற்குள் இரண்டு வழக்கறிஞர்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் பிறகு அமைச்சரின் மகள் இந்திரா மற்றும் மருமகள் மெர்சி வெளியில் வந்து கணக்கு வழக்கு தொடர்பான சோதனை மட்டுமே நடந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதியில் இருந்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு 9:00 மணி அளவில் சோதனை முடிவடைந்த நிலையில் அதிகாரிகள் மூன்று பைகளில் ஆவணங்களுடன் வெளியில் வந்து இரண்டு வாகனங்களில் புறப்பட்டு சென்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
திடீரென அமைச்சரின் வீட்டில் அதிகாரிகள் எதற்காக சோதனை மேற்கொண்டார்கள் என்றும், கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக ஐ.பெரியசாமியின் மகள், மருமகன், மருமகள் ஆகிய மூவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருப்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
