தன்னுடைய பலத்தை தீவிரமாக உலகநாடுகளில் காட்டிவரும் உருமாறிய கொரோனா : WHO

By : Bharathi Latha
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தான் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதன்பின் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பு பெரும்பாலான நாடுகளில் குறைய தொடங்கியபோது அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் வெவ்வேறு வகையில் உருமாற்ற கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்தது.
இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா ஆல்பா என்றும் இந்தியாவில் உருமாறிய கொரோனா டெல்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உருமாறிய வைரஸ் லத்தீன், அமெரிக்காக்களில் பரவியுள்ளது என்றும், இதற்கு லாம்ப்டா என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறும்போது, லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெரு நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வகையான வைரஸ் 29 லத்தீன், அமெரிக்க நாடுகளில் இருந்து பரவியுள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் வைரஸ் பரவி இருக்கிறது. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்களை தற்போது தெரிவித்துள்ளார். அந்த வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் மாறி வருகிறது என்றும், அதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது என்றும் கூறினார்.
