கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளிவைப்பு - நிர்மலா சீதாராமன் தகவல்
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளி வைக்கப்பட்டதாக மக்களவையில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
By : Karthiga
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகள் வாரியம் வகுத்த கொள்கைப்படி வார கடன்களை நான்காண்டுகள் முடிந்தவுடன் வங்கிகள் தங்களது கணக்கு இருப்பு அறிக்கையில் இருந்து நீக்க வேண்டும். இதற்கு கடன் தள்ளிவைப்பு என்று பெயர். ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்ற தகவல்களின்படி கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் 10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக்கடனை வணிக வங்கிகள் தள்ளி வைத்துள்ளன. இப்படி தள்ளி வைக்கப்பட்ட கடன்களை பெற்றவர்கள் அவற்றை திருப்பி செலுத்த கடமைப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து கடனை திரும்ப வசூலிப்பதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக வங்கிகள் நடைமுறையில் உள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகின்றன. சிவில் கோர்ட்டுகளிலும் வழக்கு தொடருதல், கடன் மீட்பு, தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வுகள், திவால் சட்டத்தின் கீழ் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருதல், பேச்சுவார்த்தை நடத்துதல், சமரச நடவடிக்கை , வாரா கடன் சொத்துகளை விற்பனை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே வாராக்கடனை தள்ளி வைப்பது கடன் வாங்கியவர்களுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது. கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில் தள்ளி வைக்கப்பட்ட வாராக்கடன்ளில் 1லட்சத்து 3 ஆயிரத்து 45 கோடி உட்பட மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 111 கோடி கடன்களை பொதுத்துறை வங்கிகள் மீட்டு உள்ளன. கடனை திருப்பிச் செலுத்த தவறியவர்களிடமிருந்து சிறு முதலீட்டாளர்களின் பணத்தை மீட்பது சிக்கல் ஆன பிரச்சனை தான். ஏனென்றால் சட்ட பிரச்சனை நீண்ட காலமாக எடுக்கும் பணத்துக்கு உரிமை கூறுவதில் வங்கிகள் நிதி நிறுவனங்கள் உட்பட பலர் இருப்பார்கள். இந்த சிரமங்களை நானும் அறிவேன். இதை பரிசீலித்து எப்படி எளிமைப்படுத்தலாம் என்று ஆராய்வது அவசியம் . மந்திரி பகவத் கிஷன் ராவ் கரத் பேசுகையில் "கடனை திரும்ப செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட இயலாது. ஆனால் அவர்களின் சொத்துக்களை ஏலத்தில் விடும்போது அவர்களது பெயர்களை தெரிவிக்க வேண்டி இருக்கும் என்று கூறினார்.