பண மோசடியில் ஈடுபட்ட 100 இணையதளங்கள் முடக்கம்- மத்திய அரசு அதிரடி!
பகுதி நேர வேலை வாங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 100 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது.
By : Karthiga
இணையதளம் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.இது போன்ற மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனாலும் மோசடி கும்பல்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றன.
இந்த நிலையில் சட்ட விரோத முதலீடுகள் மற்றும் பணி அடிப்படையிலான பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி 100க்கும் மேற்பட்ட இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.இதனை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் கிரைம் அச்சிறுத்தல் பகுப்பாய்வு பிரிவு மோசடி இணையதளங்களை கண்டறிந்து அவற்றை முடக்க பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பால் 100க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டன. பெரும்பாலான இணையதளங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்த இணையதளங்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் மற்றும் வீட்டில் இருந்தபடியே பார்க்கும் பகுதிநேர வேலையில் அதிக வருவாய் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்தன. ஓய்வு பெற்ற ஊழியர்கள் பெண்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் ஆகியோரை இலக்காக கொண்டு இந்த மோசடி இணையதளங்கள் செயல்பட்டு வந்தன.
இந்த மோசடிகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மோசடி இணையதளங்கள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டன. இத்தகைய இணையதளங்கள் குடிமக்களுக்கு கணிசமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுடன் தரவு பாதுகாப்பு கவலைகளையும் உள்ளடக்கியவை ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI