இலங்கை சிறையில் இருந்து விடுதலையான மீனவர்கள் - கோலாகல வரவேற்பு கொடுத்த பா.ஜ.க!
By : Karthiga
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை நாகையைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், லோகேஸ்வரன் , பாரதிதாசன் கலையரசன், ரவிச்சந்திரன் பிரபு உட்பட 11 பேர் கடந்த மாதம் 22ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் கைது செய்தனர்.
படகுகளுடன் அனைவரையும் இலங்கைக்கு கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய ,மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை அடுத்து தமிழக மீனவர்கள் 11 பேரையும் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை அடுத்து 11 மீனவர்களுக்கும் அவசரகால சான்று வழங்கப்பட்டு கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த மீனவர்களை பா.ஜ.க சார்பில் வரவேற்றனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.