Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கு நீட்டிப்பு, நிவாரண உதவித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்

ஊரடங்கு நீட்டிப்பு, நிவாரண உதவித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்

ஊரடங்கு நீட்டிப்பு, நிவாரண உதவித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 April 2020 11:24 AM GMT

ஊரடங்கு நீட்டிப்பு, நிவாரண உதவித்

திட்டங்களை செயல்படுத்த வேண்டும்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்; கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் அவர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்:

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,

பொருள்: கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் - தொடர்பாக

வரலாறு காணாத அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் உங்களில் துணிச்சலான தலைமைப் பண்புகளுக்கும், வலிமையான நடவடிக்கைகளுக்கும் இந்த தருணத்தில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுடனான தொலைபேசி உரையாடலில் தெரிவித்தவாறு, நான் உங்களிடம் முன்வைக்க விரும்பும் சில யோசனைகள் பின்வருமாறு:

1. தேசிய அளவிலான ஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். முதல்கட்டமாக இரு வாரங்களுக்கும், அதன்பின் கூடுதலாக ஒரு வாரத்திற்கும் நீட்டித்தல் அல்லது கொரோனா வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுக்கப்படுதல், இவற்றில் எது குறைந்த காலமோ, அந்த காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.

கொரோனா நோய் குறித்த எதிர்கால நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, இந்த நோய்ப்பரவல் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு (ICMR) மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

2. நமது தாய்நாட்டை இராணுவத்தினர் காப்பாற்றுவதைப் போன்று, கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ நலப் பணியாளர்கள் தான் நம்மைக் காக்கின்றனர். தாங்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்கும் உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.

3. ஊரடங்கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் உழவர்கள் தான். அவர்கள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய முடியாலும், சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் உள்ளனர். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக ரூ.5,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த நெருக்கடி தீர்ந்த பிறகு உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி பிரதமர் அவர்களால் வழங்கப்பட வேண்டும்.

உணவு தானியங்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றை போக்கும் வகையில், தேவையான தருணங்களில் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும்.

4. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், வாரம் ரூ.1000 வீதம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மாதந்திர அடிப்படையில் மாநில அரசுகளால் வழங்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

5. மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் அனைவரும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், உள்விளையாட்டு அரங்கங்களில் தங்கவைக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதார, மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

6. கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மற்ற நோயாளிகளுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அவர்கள் அனைவரையும் பொது மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதற்கு பதிலாக, கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும்.

7. அனைத்து வகை வங்கிகளிடமிருந்தும் பெறப்பட்ட கடன்களுக்கான 3 மாதத் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகையை அசலுடன் சேர்த்து அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ள நிலையில், அத்தொகைக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

8. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய இந்திய மருத்துவ முறையை பயன்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவிக்கிறேன்.

சீனா பாரம்பரிய சீன மருத்துவமுறையையும், நவீன மருத்துவத்தையும் இணைத்து பயன்படுத்தி கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தியது. நாமும் இந்த நெருக்கடி காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்துவ முறையை பயன்படுத்தலாம்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளின் நோய்த்தீர்க்கும் திறன் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. கொரோனா வைரஸ் கடந்த 17 ஆண்டுகளில் 3 முறை அதாவது, 2003-ல் சார்ஸ், 2012-ல் மெர்ஸ், 2019-ல் கொரோனா வைரஸ் ஆக மரபணு மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் ஆகும்.

காலநிலை மாற்றம் காரணமாக எபோலா வைரஸ், நிபா வைரஸ் ஆகியவற்றுடன் கொரோனாவும் சேர்ந்து மரபணு மாற்றம் பெற்று மோசமான வைரஸ் நோயாக உருவெடுக்கக்கூடும். இவ்வாறான புதிய நோய் உருவாவதைத் தடுக்க காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க 2015&ஆம் ஆண்டின் காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. உடன்படிக்கையில் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தன்மையை தாங்கிக் கொள்ளுதல், பாதிப்புகளைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றுக்காக 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை உலக நாடுகள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தின் விளைவான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துக் கொண்டிருக்கின்றன.

எனவே, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதில் இந்தியா உலக நாடுகளை வழிநடத்த வேண்டும்.

பிரதமர் அவர்களே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நான் முன்வைக்கும் சில யோசனைகள் இவை தான். இவை உதவியாக இருக்கும்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக உங்கள் தலைமையிலான அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இணைப்பு: கடிதத்தின் ஆங்கில நகல்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News