மழையைக் கூட பொருட்படுத்தாமல் 14 கி.மீ பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம்:உலக நன்மைக்காக ஆந்திர மாணவியின் பொதுநலம்
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி ஆந்திர மாணவி கிரிவலம். 14 கிலோமீட்டர் தூரமும் நடனமாடி சென்று தரிசனம் செய்தார்.
By : Karthiga
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி சமீப நாட்களாக தினமும் பகல் இரவு நேரங்களில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பவ்ய ஹாசினி என்ற மாணவி திருவண்ணாமலை வந்தார். பரதநாட்டிய கலையில் தேர்ச்சி பெற்ற அவர் உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் செல்ல முடிவு செய்தார். அதன்படி 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பரதநாட்டியம் ஆடியபடியே கிரிவலம் வந்தார்.
முன்னதாக அவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு வழிபாடு செய்துவிட்டு தனது கிரிவலத்தை தொடர்ந்தார். காலையில் லேசான சாரல் மழை பெய்தது. மழையையும் பொருள்படுத்தாமல் அவர் ஆடியபடி கிரிவலம் சென்றதைக் கண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மனதார வாழ்த்தினர். பின்னர் அவர் கோவில் முன்பு தனது கிரிவலத்தை நிறைவு செய்தார்.
SOURCE:DAILY THANTHI