புதிய கல்வி கொள்கையின் கீழ் நாட்டில் 14,500 மாதிரி பள்ளிகள் - ஆசிரியர் தினத்தில் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கையின் கீழ் நாட்டில் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
By : Mohan Raj
புதிய கல்விக் கொள்கையின் கீழ் நாட்டில் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
தேசிய நல் ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினர் அப்போது அவர் பேசியதாவது, 'ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதுடன் அவர்கள் வாழ்க்கையையே மாற்றும் திறன் படைத்தவர்களாக திகழ்கின்றனர்.
நம் புதிய கல்விக் கொள்கை சர்வதேச நாடுகளிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதனை வகுத்துக் கொடுத்து ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது, ஆசிரியர்களை பொறுத்த வரை ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை எந்த ஒரு ஆசிரியரும் வெறுப்பு இல்லாமல் மாணவர்களை சமமானவர்களாக பார்க்கின்றனர்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நேர்மையான சிந்தனையை ஊக்குவிக்கின்றனர் மாணவர்களுக்கான லட்சியத்துக்கு விதை போடுகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளால் தான் எல்லா விதமான சவால்களையும் சந்திக்கும் தைரியம் மாணவர்களுக்கு உருவாகிறது. நம் நாடு கல்வி சூழலை பலப்படுத்துவதற்கு சரியான திசையில் பயணிக்கிறது. இதை உலகமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது சர்வதேச அளவில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக நாம் வளர்ந்துள்ளோம். 250 ஆண்டுகளாக நம்மை ஆட்சிசெய்தவர்களை பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்கு தள்ளி உள்ளோம்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி 'பிரதம மந்திரி எழுச்சி இந்தியாவுக்கான பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். தேசிய கல்விக் கொள்கை முழு அம்சத்தையும் முன்னெடுக்கும் வகையில் இவை மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் இந்த பள்ளிகளில் கண்டுபிடிப்பு சார்ந்த கற்பித்தல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்' என அவர் கூறினார்.