ஆன்மீக உறவை வலுப்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க 1500 பேர் தேர்வு- முதற்கட்டமாக 216 பேர் வாரணாசிக்கு பயணம்!
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் கட்டமாக 216 பேர் நேற்று சிறப்பு ரயில் மூலம் வாரணாசிக்கு புறப்பட்டனர். அவர்களை கவர்னர் ஆர்.என் ரவி கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
By : Karthiga
தமிழ்நாடு-வாரணாசிக்கு இடையே ஆன ஆன்மீக உறவை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு தொடங்கியது. அந்த வகையில் காசி தமிழ்ச் சங்கமம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நாளை முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காசியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து இந்த மாதிரி 1500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று 216 பேர் சிறப்பு ரயில் மூலம் வாரணாசிக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி பங்கேற்று வாரணாசி செல்லும் பயணிகள் சிறப்பு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல 17 ,19 ,21 ,23, 25 மற்றும் 27 தேதிகளில் தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் சுதாகர் ரெட்டி பேசுகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட மக்கள் பங்கேற்க இருக்கிறார்கள். கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தேசிய அளவில் நாம் அனைவரும் ஒன்று என்பதை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியாகவே காசி தமிழ் சங்கமம் அமைய உள்ளது என்றார்
SOURCE :DAILY THANTHI