சாதி சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகளா? ஐ-கோர்ட்டு கடும் கண்டனம்
எஸ்.டி சாதி சான்றிதழை சரிபார்க்க 20 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட மாநில அளவிலான குழுவுக்கு சென்னை ஹைகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி, எல்.ஐ.சி நிறுவனத்தில் எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருத்தணி தாசில்தார் அளித்த சாதி சான்றிதழை சரி பார்ப்பதற்காக எல்.ஐ.சி நிறுவனம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி விட்டது. அந்த சான்றிதழை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் லலிதா குமாரி லலிதா குமாரி எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அவரது ஜாதி சான்றிதழை ரத்து செய்து உத்தரவு தெரிவித்தார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் ஜாதி சான்றிதழை சரி பார்க்கும்படி மாநில அளவிலான குழுவுக்கு கடந்த 1998ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி லலிதா குமாரி ஜாதி சான்றிதழை சரி பார்த்து அதை உறுதி செய்து கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில குழு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு உரிய பதவி உயர்வுகளும் வழங்கக்கோரி லலிதா குமாரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ் பாபு, லலிதா குமாரியின் சாதி சான்று சரிதான் என உத்தரவிடப்பட்டுள்ளதால் அவருக்குரிய அனைத்து பணி மற்றும் பண பலன்களை வழங்கும்படி எல்.ஐ.சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
அலுவலக குழு 20 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொண்டது வேதனை அளிக்கிறது என்று கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த குழு விரைவாக விசாரணை நடத்தி முடித்தாலும் எஸ்.டி நல இயக்குனரக அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காலதாமதம் செய்கின்றனர். எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.