2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு நாளையுடன் நிறைவு வங்கிகள் தீவிர நடவடிக்கை!
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
By : Karthiga
நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் புதிதாக ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கிடையே ரூபாய் 2000 நோட்டுகள் செல்லாது என்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்தது .
இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் மனிதர்கள் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதற்கான வங்கிகள் சிறப்பு கவுண்டர்களையும் திறந்து இருந்தன. இதற்கிடையே ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ரூபாய் 2000 நோட்டுகளை வழங்கினால் அவற்றை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். மீறி வாங்கினால் அதற்கு கண்டக்டர்களே முழுமையான பொறுப்பாளர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்ககு இடையே தமிழ்நாடு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்க தலைவர் முரளி கூறும்போது மத்திய அரசு ரூபாய் 2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் இருந்த நோட்டுகளை வங்கிகளில் படிப்படியாக கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு ரூபாய் 2000 நோட்டு வருவது முற்றிலும் நின்று போனது .
சிலர் ரூபாய் 2000 நோட்டுகளை வழங்கி கார் வேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிச் சென்றுள்ளனர். தற்போது அதுவும் நின்று விட்டது. நாளையுடன் ரூபாய் 2000 நோட்டுகள் நீக்கப்படுவதால் இன்று முதல் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் ரூபாய் 2000 வாங்குவதை நிறுத்தி உள்ளோம். இது குறித்து சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களும் இனிய ரூபாய் 2000 நோட்டுகள் தருவதை தவிர்க்கலாம் என்றார்.
SOURCE :DAILY THANTHI