ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா - ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடக்கம்
ஏப்ரல் 22 - 2023 குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
By : Karthiga
நீடாமங்கலம் அருகே ஆலங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவிலில் வருடம் தோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குரு பெயர்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வருகிற 22ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம் இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா அதி விமரிசையாக நடைபெற உள்ளது .
விழாவை ஒட்டி குரு பகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. மேஷம் , ரிஷபம் , கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.
இதில் திருப்பனந்தாள் காசி மடம் இளைய சன்னிதானம், அறநிலைய உதவி ஆணையர் மணவழகன், கோவில் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 20 -ஆம்தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனையுடன் மீண்டும் குரு பெயர்ச்சிக்கு பின் வருகிற 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.