கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூபாய் 24 ஆயிரம் கோடியில் திட்டம் - அசத்தும் மத்திய அரசு!
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த 24,435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தி.மு.க உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத் திட்டம் பற்றி கேள்வி கேட்டு இருந்தனர். அதாவது கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள், மாமல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்கு வழி சாலை திட்டத்தின் முன்னேற்றங்கள் , கிழக்கு கடற்கரை சாலைக்கான மொத்த திட்ட செலவுகள் பற்றி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கிழக்கு கடற்கரைச் சாலை மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பாலங்கள் சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழியாக அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கடலூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையயும் விரிவுபடுத்தும் நிலையில் உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இந்த கிழக்கு கடற்கரை சாலையை விரிவு படுத்துவதற்கான மொத்த திட்ட மதிப்பீட்டு செலவு ரூபாய் 24,435 கோடியாகும் .
திட்டப்பணி மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கிலோமீட்டர் தூரம் நான்கு வழி, முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோமீட்டர் நான்கு வழி, மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 46 கிலோ மீட்டர் வழி, புதுச்சேரி முதல் பூண்டியன் குப்பம் வரை 38 கிலோமீட்டர் நான்கு வழி, பூண்டியன் குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை 56 கிலோ மீட்டர் நான்கு வழி ,சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55 கிலோமீட்டர் 4 வழி, நாகப்பட்டினம் முதல் இராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை 313 கிலோ மீட்டர் வழி , தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை 125 கிலோமீட்டர் வழியென எட்டு பிரிவாக நடத்தப்பட உள்ளன.
இதில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலான 31 கிலோமீட்டர் 4 வழியை 11-5 - 2024 அன்று முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 28 -2-2023 வரை 2.47 சதவீத அளவே பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான 31 கிலோ மீட்டர் நான்கு வழி பணிகளுக்கு 11- 5 -2022 அன்று பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கிலோ மீட்டர் பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல் பாண்டியன் குப்பம் வரை 38 கிலோமீட்டர் பணிகளை 14- 11- 2023 அன்று முடிதக்க திட்டமிடப்பட்டதில் 41.60 சதவீத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.