பிரதர் மோடி தலைமையில் உலகத்தரத்தில் உயர இருக்கும் தெற்கு ரயில்வேயின் 25 ரயில் நிலையங்கள்
தஞ்சாவூர், மயிலாடுதுறை உட்பட தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்களை உலக தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
By : Karthiga
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரய்யா தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகனேசன் ஆகியோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு அங்கமாக அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் 139 ரயில் நிலையங்களை உலகத் தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 508 ரயில் நிலையங்களை ரூபாய் 24,470 கோடியில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார் . இதில் தெற்குரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்களும் அடங்கும்.
இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும். லிப்ட், பயணிகள் நடை மேம்பாலம், கூடுதல் நடைமுறைகள், பயணிகள் காத்திருக்க விசாலமான அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடர்பு முறை, நடை மேம்பால கூரை, நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்த வசதி, மின் விநியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.
தமிழகத்தின் முதல் கட்டமாக செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர் போத்தனூர் , தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம் நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்களும் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் கேரள மாநிலத்தில் காசர்கோடு , பையனூர், வடக்காரா , திரூர் மற்றும் சொரனூர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களும் கர்நாடக மாநிலத்தின் மங்களூரு என மொத்தம் 25 ரயில் நிலையங்கள் ரூபாய் 616 கோடியில் முதல் கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளது.
அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்ட பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் . சென்னை எழும்பூர் கடற்கரை இடையே நான்காவது புதிய வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துப் மணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க இருக்கிறோம். அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி விடுவோம். பறக்கும் ரயில் நிலையத்தை சென்னை மெட்ரோ ரயில் உடன் இணைப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்
SOURCE :DAILY THANTHI