2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீடு வழக்கு அடுத்த மாதம் விசாரணை- ஆ. ராசா, கனிமொழி எழுத்துப்பூர்வ வார்த்தையை தாக்கல் செய்ய உத்தரவு!
டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீடு வழக்கில் அடுத்த மாதம் விசாரணை நடக்கிறது .இதில் ஆ.ராசா கனிமொழி , சி. பி.ஐ அமலாக்கத்துறை அமலாக்கத்துடன் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
By : Karthiga
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்க துறையும் வழக்கு தொடுத்தன .இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஹைகோர்ட் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு ஆதாரமற்றது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது .இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி தினேஷ்குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விரிவாக வாதிட வசதியாக பட்டியலிட வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ வக்கீல் நீரஜ் ஜெயின் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தினேஷ்குமார் சர்மா அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் சி.பி.ஐ .,மத்திய அமலாக்கத்துறை, ஆ.ராசா கனிமொழி மற்றும் தொடர்புடைய அனைவரும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தினேஷ்குமார் ஷர்மா உத்தரவிட்டார் .