கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூபாய் 34,000 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு- மத்திய அரசு தகவல்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 34,000 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
By : Karthiga
கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி இழப்பீடு விவரங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் வட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் இந்திய கட்டுப்பாட்டாளர் மற்றும் பொது தணிக்கையாளரின் தணிக்கை புள்ளி விவரங்கள் கிடைத்த பிறகு ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மந்திரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கான இழப்பீடு விவரங்களை பட்டியலாக கொடுத்திருந்தார் .
இதன்படி 2020 - 2021, 2021 - 2022, 2022- 2023 ஆகிய நிதி ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூபாய் மூன்று லட்சத்து 83 ஆயிரத்து 656 கோடி இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதில் தமிழ்நாட்டுக்கு முறையே ரூபாய் 11,142 கோடி, ரூபாய் 6,697 கோடி, ரூபாய் 16,215 கோடி என மொத்தம் ரூபாய் 34,054 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.607 கோடி, ரூ. 329 கோடி ரூ.723 கோடி 1,659 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.