35 லட்சம் பேரின் ரீபண்ட் கோரிக்கைகள் நிறுத்திவைப்பு - வருமானவரித் துறை தகவல்!
35 லட்சம் பேரின் 'ரீபண்ட்' கோரிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.
By : Karthiga
வருமானவரித்துறையின் நிர்வாக அமைப்பாளர் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
கடந்த நிதியாண்டுக்கான ஏழு கோடியே 27 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 7 கோடியயே 15 லட்சம் கணக்குகள் வரி செலுத்துவோரால் சரிபார்க்கப்பட்டன. அவற்றில் 6 கோடியே 80 லட்சம் கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம். அதாவது சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் 93.5 சதவீத கணக்குகளை தணிக்கை செய்துள்ளோம் . நேரடி வரிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 9 லட்சத்து 57,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது தவிர ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரீபண்ட் அளித்துள்ளோம். நிதியாண்டு முடியும் போது பட்ஜெட்டில் மதிப்பீட்டை விட நேரடி வரி வசூல் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறோம். அதே சமயம் 35 லட்சம் பேருக்கு தர வேண்டிய ரீபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . அதற்கு காரணம் அவர்கள் அளித்த தகவல்கள் ஒத்துப் போகவில்லை. வங்கி கணக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அவர்களது வங்கி பிற வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஐ.எஃ.ப்.எஸ்.சி எண் மாறி இருக்கலாம். அதனால் அந்த வரி செலுத்துவோரை வருமானவரித்துறை ஊழியர்கள் சிறப்பு கால் சென்டர் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படும். வரி செலுத்துவோரின் சரியான வங்கி கணக்கில் ரீபண்ட் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். வீட்டு கடன் மற்றும் சேமிப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்காத புதிய வருமான வரி திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 60 முதல் 70 சதவீத தனி நபர்கள் அந்த புதிய திட்டத்திற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI