இந்தியா தலைமை தாங்கும் ஜி- 20 மாநாட்டிற்காக 500 வகையில் ருசியான உணவுகள் : அசைவம் கிடையாது!
முதல் முறையாக இந்தியா தலைமை தாங்க உள்ள ஜி - 20 மாநாட்டில் 500 வகையில் ருசியான உணவுகள் வழங்கப்படுகின்றன.இதில் அசைவம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
By : Karthiga
ஜி - 20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டும் டிசம்பர் மாதம் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து நாடு முழுவதும் ஜி- 20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது . இந்த மாநாட்டை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் மாநாட்டுக்கான ஒவ்வொரு வேலையையும் செதுக்கி செய்துள்ளனர். உணவு ஏற்பாடுகளும் அந்த வகையிலேயே செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் முழுக்க முழுக்க சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது . இந்த ஆண்டு தினை ஆண்டாக இந்தியா கடைபிடிப்பதால் தினை உணவுகள் அனைத்தும் இடம் பெறுகின்றன. மாநாட்டுக்கான உணவுகள் தயாரிப்பை தாஜ் ஹோட்டல் நிர்வாகம் ஏற்றுள்ளது. உணவு தயாரிப்பு பணியில் 120-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் சுமார் 500 உணவு வகைகளை தயாரிக்கிறார்கள்.
தென்னிந்திய மசால் தோசை, ராஜஸ்தானின் தால்பாடி சுர்மா, பீகாரின் லிட்டில் சோக்கா, பெங்காலி ரசகுல்லா சிறப்பு தினை தாலி போன்றவை மண்மனம் மாறாமல் சமைக்கப்பட உள்ளது . தலைவர்கள் சாப்பிடுவதற்காக புத்தம் புது வெள்ளி பாத்திரங்கள், தங்க முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து மட்டும் தட்டு, டம்ளர், கலை நயமிக்க 15,000 வெள்ளி பொருட்கள் வரவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு தலைவர்கள் மகிழும் வகையில் விழாவை எந்த அளவுக்கு நடத்த வேண்டுமோ அந்த அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
SOURCE :DAILY THANTHI