அரசு பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு - கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?
தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் - 2 கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர் . அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இரண்டு மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலைக்காக பதிவு செய்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 30- ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு தாரர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
பதிவு செய்து அரசு வேலைக்கு காத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 7,600. பெண்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 .மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 266 என மொத்தம் 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 பேராகும். அவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். 19 முதல் 30 வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 பேர் .
31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 32,990 பேர் . 46 முதல் 60 வயது வரை உள்ள பதிவுதாரர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,11 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 358 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.